Sunday, May 2, 2010

தரிசனம் 19

குரு: இன்னும் ஒரு பயிற்சியை செய்து பார்க்கலாமா?
சாதகன்: அப்படியே ஆகட்டும் குருவே!
குரு: ஒரு நீண்ட தியானத்துக்கு பின், உன்னை முழுமையாக குருவிடம் சரண் செய்த பின், உன்னிடம் எஞ்சி இருப்பது என்ன?
சாதகன்: அப்போது ஒரு அறிநிலை மட்டும் இருக்கும் குருவே!
குரு: ஒரு நீண்ட தியானத்துக்கு பின், உன்னை முழுமையாக குருவிடம் சரண் செய்த பின்,உன்னிடம் ஒரு அறிநிலை மட்டும் இருக்கும். அதன் பின் - இந்த இடத்திலிருந்து, இப்பயிற்சியை துவங்குவோம். இப்போது நீ உன்னை ,உனது உடலை, உடலுள் நடக்கும் உணர்வை அறிய தொடங்கு. இப்போது நீ இருக்கிறாய். ( உன்னை அப்படியே முழுமையாக உனது குருவிடம் சரண் செய்தல் என்பது, உன்னுடையஒரு 'விருப்ப மரணம்' மாதிரிதானே!) அதையே மீண்டும் ஒரு முறை வேறு விதமாக நிகழ்த்தி பார்க்கலாம். உனது கற்பனையில் இது நடக்கட்டும். ஒரு உண்மையான சம்பவம்போல இது நடக்கட்டும். இந்த சம்பவத்தை உண்மையாகவே உனக்குள் நடத்தி பார்க்கிறாய்! ஒரு தர்க்க ரீதியாக, ஒரு நம்பிக்கையாக, ஒரு நிஜமான சம்பவம்போல, உன் முழு சம்மதத்துடன் இது நடக்கட்டும். 'உன்னை'ப் பொறுத்தவரை இது உண்மை.
இப்போது ஒரு விபத்தில் நீ உண்மையாகவே இறந்து விட்டாய். உடனே உன் உயிர் உனது உடலை விட்டு பிரிகிறது. நீ செய்வது இனி எதுவுமில்லை. எதுவும் செய்யவும் முடியாது. எதோ ஒரு சூட்சும காரணத்தால் அங்கு நடப்பது மட்டும் உனக்கு தெரிகிறது. உனது உடல் இனி எதற்கும் உதவாது. உடலே சிதறி கிடக்கிறது. எங்கும் செந்நிற ரத்தம். தலை நசுங்கி முகமே அடையாளம் தெரியவில்லை. இப்படியும் உடல் அலங்கோலமாகுமா! என்பது போல் உடல் அலங்கோலமாக கிடக்கிறது. அங்கு ஒரே கூட்டம். கீழே கிடக்கும் ரத்தம் கூட்டத்தின் கால்களில் மிதிபடுகிறது. ரத்தம், எலும்பு, சதை, குடல் சரிந்து கிடக்கிறது. உன் வீட்டுக்கு தகவல் போய் உன் மனைவி வருகிறாள். (அல்லது கணவன்) உன் குழந்தைகள், உனது உறவினர், உனது நண்பர்கள் உனது சுற்றம் எல்லோரையும் கடைசியாக பார்த்துக்கொள். போலீஸ் கேஸ். மருத்துவமனை, பிணவறையில் நம்முடை எதோ ஒரு சகோதரனோ, சகோதரியோ அறுத்து வெள்ளைத்துணியில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவனுக்கு என்ன நேர்ந்ததோ?
இப்போது உன்னையும் அறுத்து ஒரு வெள்ளைத்துணியில் போட்டு கட்டியாகி விட்டது. மீண்டும் ஆம்புலன்ஸ். இப்போ உன் வீடு. உன்னைப்பற்றி ஒவ்வொருவரும் ஒரு விதமாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். சடங்கு நடக்கிறது. . உன்னை தூக்கிக்கொண்டு போக பாடை தயார். இதெல்லாம் நிதர்சனம். இனி உன்னால் ஆகப்போவது எதுவுமில்லை. ஊர்கூடி உன் சவ யாத்திரை. சுடு காட்டில் பழைய டயர்களும், விறகு கட்டைகளும் ரெடியாக உள்ளது. உன்னை எரியூட்டப்போகிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ வெறும் சாம்பல் தான். அந்த சாம்பலும் வேகமாக காற்றடித்தால் அங்கு நிற்காது. இரண்டு நாள் கழித்து வந்து பார்த்ததால், உன்னைப்போல் இன்னொருவன் எரிந்து கொண்டிருப்பான். எல்லாம் முடிந்தது. நீ இப்போது இல்லை. உனது எச்சம் கூட இல்லை. உன்னிடம் எந்த சலனமுமில்லை.எந்த விகல்பமுமில்லை. உன்னுடைய வானில் ஒரு மாசு, மருவில்லை. நிச்சலனம். எவ்வளவு நேரம் இதில் உன்னால் இருக்க முடியுமோ! அவ்வளவு நேரம் இருந்து விட்டு, கண்களை மூடிய படியே கை, கால்களை லேசாக அசைக்கவும். உடலை அசைக்கவும். உன் உடலிலுள்ள அனைத்து அங்கங்களையும் ஓட விடவும். லேசாக சுவாச ஓட்டத்தை கவனித்த படி கொஞ்சம், கொஞ்சமாக கண் விழித்து வெளி உலகை காணவும். இப்போது நீ உயிருடன் இருக்கிறாய். இது உனக்கு கிடைத்த இரண்டாவது வாழ்க்கை. இனி இன்றைக்கு நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனி. உனக்குள் இருக்கும் உன் 'பதிவகள்' எப்படி விளையாடுகிறது என்பதை.

Saturday, May 1, 2010

தரிசனம் 18

குரு:அவரவர் பெற்றிருக்கும் பொது அறிவினை கைப்பிடித்து , அவரவர் தர்க்க அறிவு நடக்கிறது. அவரவர் பெற்றிருக்கும் தர்க்க அறிவினை கைப்பிடித்து அவரவர் நம்பிக்கை நடக்கிறது. அவரவர் நம்பிக்கையை கைப்பிடித்து அவரவர் உண்மை நடக்கிறது. அவரவர் நம்புவது மட்டும் அவரவர்க்கு உண்மை. அவரவர் உண்மையை கைப்பிடித்து அவரவர் வாழ்க்கை நடக்கிறது. -(இதுவே பூரண உண்மை)- நீ உனது குருவிடம் , உன் பொது அறிவு, உன் தர்க்க அறிவு,உன் நம்பிக்கை, உன் உண்மை, உன் வாழ்க்கை அனைத்தையும் சமர்பித்தல் வேண்டும்.நீ சமர்பித்து நிராயுத பாணியாக நின்றால்,இப்போது
அந்த பூரண உண்மை உன்னை வழிநடத்தும்.
மனிதப்பிறவியின் முக்கிய நோக்கமே உண்மையை அறிவதுதான். இதற்கு அந்த 'பூரண உண்மையே' வழிகாட்ட வேண்டும். மனம் என்ற ஆகாயத்தில் (வெட்ட வெளியில்) மூளையின் எண்ணங்கள், சிந்தனைகள், நினைவுகள் என சுழன்றுகொண்டிருக்கின்றன, அதனால் உண்மையை அறியும் வழி நழுவி விடுகிறது. நீ கற்றதை, கேட்டதை, எண்ணியதை நீக்கி, உனக்குள் இருக்கும் அந்த தூய தெளிந்த (வெட்ட வெளி) ஆகாயத்தில் சஞ்சரிக்கும் உத்தியை கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இனி, அந்த 'பூரண உண்மை' வழிகாட்டும்.